வெள்ளி, டிசம்பர் 03, 2010

வெந்தயக்கீரை


கீரை வகைகளில் மிகவும் குளுமையான வெந்தயக்கீரை, தாராளமாக சூரிய வெளிச்சமும், தண்ணீரும் கிடைக்குமிடத்தில் செழித்து வளரும். வருடா வருடம் விதைத்து வளர்க்கும் இந்த மூலிகைக் கீரை அதிக பட்சம் ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரும்.

உடலை ஆரோக்கியமாகவும் வயிற்றை சுத்தமாகவும் வைக்கும் வெந்தயக்கீரையில் உலக சுகாதாரக் கழகத்தின் (றாடி) கணிப்புப்படி இதன் புரதச் சத்தின் அளவு 65. நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கிரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது. இந்த அளவு வெந்தயக்கீரை 49 கலோரிச்சத்து தருகிறது.

வெந்தயக்கீரையோடு, பாசிப்பருப்பைச் சேர்த்து உண்பதால் கல்லீரல் பலப்படுகிறது. வாய் வேக்காடு வராமல் காப்பாற்றுகிறது. பருப்பு சேர்த்து சுவையாகத் தயாரிக்கப்படும் வெந்தயக்கீரையை நெய்சேர்த்து சோற்றோடு பிசைந்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானது. உப்பு, புளி, காரம் சேர்த்து வெந்தயக்கீரையை தொக்காக்கி பல நாட்களுக்கு பயன்படுத்தலாம். பருவத்துக்கு வரக்கூடிய பெண்களின் ரத்தவிருத்திக்கு அவசியமானது.
வெந்தயக்கீரையில் விட்டமின் ஏயும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, சிரங்கு... என்று அத்தனைக்கும் அருமருந்தாகிறது. இக்கீரையை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு புற்றுப் போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.

சீஸனில் இந்தக் கீரையை நிறைய வாங்கி சுத்தப்படுத்தி, காயவைத்து, காற்றுபுகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொண்டு வருடம் முழுவதும் உபயோகிப்பதால் லைஸின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.

வெந்தயம்:

வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால் தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற்காய் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகிவிடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் (clycosides) வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்த கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாக சுரக்கத் தூண்டிவிடுகிறது. அசைவ உணவுக்காரர்களுக்கு இது நன்மை கூட்டுகிறது.

வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது. நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.
தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை ம்ட்டும் வடிகட்டிக் குடிக்கலாம்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம்.

மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப் போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது இழக்கும் தெம்பை மீட்க உதவும்.
நல்ல ருசியான உணவு தயாரிப்புகளின் வாசனை வந்தும்கூடி பசி கிளம்பாமலோ நாவில் ருசி மரத்துப் போயிருந்தாலோ கூட இதுவே மருந்து.
கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல்... போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும்.
இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.

கருத்துகள் இல்லை: