வெள்ளி, டிசம்பர் 31, 2010

பேரீச்சம்பழம்

               யற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.  பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.  அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.  

வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.  இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.  இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.   சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.  இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

Tamil                 - Perecham pazham
English               - Date palm
Malayalam         - Ita pazham
Sanskrit             - Kharjurah
Telugu               - Ita
Botanical Name - Phoenix dactylifera


இதன் காய் கர்ச்சூரக்காய் என்று வழங்கப் படுகின்றது.

பேரீந்தெனுங்கனிக்குப் பித்தமத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
இரத்தபித்த நீரழிவி லைப்பறும் அரோசி
உரத்த மலக் கட்டுமறும் ஓது.
        - அகத்தியர் குணபாடம்

கண்பார்வை தெளிவடைய

பொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.  

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும்.  இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.  மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மெலிந்த குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள்.  பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள்.    இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள்.  ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர்.  

வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது.   இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால்  குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.  மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.  இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.  மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.  அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.   இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.  நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.  இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை.  இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.  இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.  கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது.  அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும்.  மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள்.  சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது.  இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது

புதன், டிசம்பர் 29, 2010

கள்ளிமுளையான்





கள்ளிமுளையான்.



1) மூலிகையின் பெயர் -: கள்ளிமுளையான்.



2) தாவரப்பெயர் -: CARALLUMA FIMBRIATUM.



3) தாவரக்குடும்பம் -: ARACEAE.



4) வேறு பெயர்கள் -: கள்ளிமுடையான்.



5) தாவர அமைப்பு - கள்ளிமுளையான் ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை போல் குத்தாக வளரும் அடிபாகம் நாற்சதுரமாகவும் வளர,வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும். சாம்பல்,சிவப்பு நிறங்கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம்வரை வளரும். வரட்சியைத் தாங்கும். நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையாக சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும்.ஆதிவாசிகள் மலையில் நடக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச் சாப்பிடுவார்கள. இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும். இனப் பெருக்கம் வேர், பக்கக்கன்றுகள் அல்லது தண்டுகள் மூலம் நடைபெரும்.


6) பயன்படும் பாகங்கள் - : தண்டுகள் மட்டும் பயன்படும்.



7) மருத்துவப் பயன்கள் - : கள்ளிமுளையான் உமிழ் நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிர்ச்சி உண்டாக்கும். செரிப்பை விரைவு படுத்தும், உடலை உரம்பெற வைக்கும். குமட்டல் வாந்தியை நிறுத்தும், நாவின் சவையுணர்வை ஒழுங்கு படுத்தும், நீர் வேட்கையை அடக்கும். ஒரு பாடல் -


"வாய்க்குப் புளித்திருக்கும் வன்பசியை உண்டாக்கும்

ஏய்க்குமடன் வாதத்தையும் ஏறுபித்தம் சாய்க்கும்

தெள்ளிய இன்ப மொழித் தெய்வ மடவனமே

கள்ளிமுளையானை அருந்திக் காண்".


சித்த வடாகம் என்ற நூலில் கும்ப முனி இவ்வாறு கூறுகின்றார்.
புளிப்புச் சுவையுள்ள கள்ளிமுளையான் பசியையுண்டாக்கும் வாத மந்தத்தையும் பித்த தோஷத்தையும் மாற்றும் என்க.


உபயோகிக்கும் முறை - இதனைப் பற்றி தின்ன வாய்க்குள் புளிப்புச் சுவையோடு இதமாக இருப்பதுடன் பசியையுண்டாக்கி பித்தத்தைத் தணிக்கும்.


துவையல் - இதை சிறு துண்டுகளாக நறுக்கி எள் நெய் விட்டு வதக்கி, உழுந்து, இஞ்சி, கொத்துமல்லி, மிளகு, சீரகம், புளி, வைத்துத் துவையலாக அரைக்கவும், வாரம் ஒருமுறை உணவில் உட்கொள்ள மேற்கண்ட பயனைப் பெறலாம். வாந்தி, நீர் ஊறல் நிற்கும், உடல் வெப்பம் குறையும், உடல் நலம் பெறும்.



பித்த குன்மம், குடல் வாய்வுக்கு மருந்து செய்வோர் இதனைச் சேர்த்துச் செய்வார்கள். மேலை நாடுகளில் கள்ளிமுளையானின் முக்கிய வேதியப் பொருளின் தன்மையை ஆராச்சி செய்து (CALLOGENESIS & ORGANOGENESIS) அது உடல் பருமனைக் குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைகுணமாக்கும் என்று கண்டு பிடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து செய்துகொண்டுள்ளார்கள். இது தற்போது தமிழ்நாட்டில் வியாபாரப் பயிராகச் செய்கிறார்கள்.


கள்ளிமுளையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் என்று தற்போது அறிந்துள்ளார்கள். இதை ஈரோடு சாம்பார் சண்முகம் எனபவர் செயலில் ஈடுபட்டு நிரூபித்துள்ளார். இதை வீடுகளில் வளர்க்கலாம். என் வீட்டிலும் உள்ளது

சனி, டிசம்பர் 25, 2010

சீறுநீர் கல்லடைப்பு

சிறிய வாழை மரத்தின் பாதியை வெட்டி அதன் நடுவே இருக்கும் (inner layer)
உட்குருத்தை வெட்டி எடுத்து ஒரு குழி போல் ஆக்க வேண்டும்.இதை சூரியன்
மறைந்ததும் சாயங்காலம் வெட்டி வைத்துவிட்டு அதன் மேல் பனிவிழும்படி
இருக்க வேண்டும். வெட்டிய இடத்தின் மேல் ஒரு சல்லடை(Filter) வைத்துவிட
வேண்டும். அதிகாலை 7 மணிக்குள் வெட்டிய இடத்தை பார்த்தால் அந்த இடம்
முழுவதும் வாழைச்சாற்றால் நிரப்பப்பட்டிருக்கும்.
அப்படியே ஒரு உறிஞ்சு குழல் (straw) கொண்டு வெறும் வயிற்றில் குடிக்க
வேண்டும். அதன் பின் சரியாக 9 மணிக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் அதன்
பின் காலை உணவு சாப்பிடலாம். 
இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றை
குடிக்க வேண்டும்

இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும்

உலகில் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொரு வரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவமுறையை நாடுகின்றனர். சமீபகாலமாக ‘இயற்கை மருத்துவம்’ என்னும் புதிய மருத்துவமுறை, உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

இயற்கை மருத்துவம் என்றால்…? தாவரங்கள் ஊசி போடுமா…? மரங்கள் மருந்து தடவுமா…? என்றெல்லாம் கேலியாகக் கேட்கலாம். ஆனால் இயற்கை மருத்துவத்தின் தார்பாரியம் அதுவல்ல.மனிதன் ஆரோக்கியமாக வாழவும், அவனது உடலில் ஏற்படும் பிரச்னை களைச்சரி செய்யவும் இயற்கையிலேயே எண்ணற்றத் தீர்வுகள் இருக்கின்றன.
மருத்துவ மாத்திரைகளை நம்பி வாழும் நவநாகரிக மனிதனுக்கு வேண்டுமானால் இயற்கை மருத்துவம் என்பதும், அதன் தார்பாரியங்களும்  புதிதாக, புதிராக இருக்கலாம். ஆனால் ஆதி மனிதனுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமல்ல.
மனிதன் படைக்கப்பட்ட புதிதில் இயற்கையோடு கை கோத்துக்கொண்டுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். அப்போது அவனது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆதிமனிதனின் ஆரோக்கியத்திலும் எந்தக் குறையும் இல்லை. அதில் குறைபாடு ஏற்பட்டாலும் இயற்கையில் இருந்தே அவனது பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது.
நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதன் இயற்கையில் இருந்து விலக ஆரம்பித்தான். பிரச்னைகளுக்கான தீர்வுகளை மனிதன், தனது தாரமான இயற்கையில் தேடாமல், செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தான். அதில் அவனுக்கு வெற்றியும் கிடைத்தது. அந்த வெற்றியின் காரணமாக இயற்கையே வெல்லமுடியும்’ என்கிற ஆசையும்,நம்பிக்கையும் அவனிடத்தில் உருவாகின. அதன் விளைவாகக் கண்டுபிடிப்புகள் பெருகின. இயந்திரங்கள் அதிகரித்தன. மனிதன், இயற்கையில் இருந்து முற்றிலுமாக அந்நியப்பட்டுப்  போனான்
இயந்திரங்களின் பெருக்கத்தால் காற்று, நீர், அண்டவெளி, மண் போன்ற இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் மாசடைந்தன. அதன் விளைவாக, மனிதன், விலங்கு, பறவை, தாவரங்கள் மற்றுமுள்ள உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இயல்புக்கு மாறான தோற்றங்கொண்டு, நோய்களைப் பெற்றுக் கொண்டன.
தமிழ் மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும்போது, மொத்தமுள்ள நோய்களின் எண்ணிக்கை 4448 என்று தெரிய வருகிறது. அக்கணக்கு சுமார் ஆயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும். ஆனால், இன்றைய மருத்துவர்களை நோய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால், விழிக்கின்றனர். தினந்தோறும் புத்தம்புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், பல நோய்களுக்கு மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.
வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டிய உயிரினம், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது. எந்த மருந்தாவது, எந்த நோயைத் தீர்த்து வைக்காதா? என்ற ஏக்கம் அனைத்து உயிரினங்களின் முகத்திலும் தெரிகிறது.
விலங்குகளையும் பறவைகளையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் மனித இனத்தையாவது காப்பாற்றியாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றது, மருத்துவம். அதனால்தான் பல்வேறு மருத்துவமுறைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு வாகளைக் கையாண்டு மனிதன் தன்னைத் தாக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடித்தான். அத்தகைய வழிகள் தான் சித்தா, ஆங்கிலம், ஆயுர்வேதம் எனப் பிரிந்தன.
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பழங்கால மனிதன், ஆரோக்கியம்  பாதிக்கப்படாத வகையில் தனது வாழக்கை முறையை அமைத்துக் கொண்டான். அதையும் மீறிஉடல் நிலை பாதிக்கப்பட்டபோது, இயற்கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்து கொண்டான். அவனது வாழ்க்கை முறையையும், தனக்குத்தானே அவன் செய்து கொண்ட சிகிச்சைகளையும் ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தித்தான் இயற்கை மருத்துவம் உருவாக்கப்பட்டது.
இயற்கையிலிருந்து உருவான என்பதால்தான் மற்ற மருத்துவமுறைகளை விட, இது மேலானதாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது. பரம்பரை நோய், ஓட்டு நோய், தொற்று நோய், உணவு நோய், உடை நோய், உறவு நோய், உவகை நோய் போன்ற எல்லாவிதமான நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்வதுதான் இயற்கை மருத்துவம்.
தற்போது பூமியில் நிலவிவரும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் உருவாகிற நோய்ப்பெருக்கம் மனித இனத்துக்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தன்னையும் தன்னினத்துச் சந்ததிகளையும் பாதுகாக்கும் வல்லமையை இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கிறது. இயற்கை மருத்துவம் அந்த வல்லமையைத்தான் உலகுக்குப் புரிய வைக்கிறது.
உண்மையில் இயற்கை மருத்துவத்தின் அடிப்படை என்ன?
மனிதன் உயிர் வாழவதற்கு வேண்டிய முதன்மை உணவாக சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை உள்ளன. இவை இருக்கும் வரை, மனித உடல் இயங்குவரை பட்டினி என்பதே இருக்காது-. மனிதன் உண்ணும் உணவெல்லாம், மனித உடலுக்குத் தேவைப்படாதவை. சூரிய சக்தியே உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் தேவையான முதன்மை உணவு. அதுவே, ஆற்றலின் இருப்பிடம்.
இம்மண்ணில் பட்டினியால் இறப்போரைவிட, முறையட்ட உணவுப்பழக்கதால் இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். உணவுப்பழக்கத்தால், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் உண்டாகும் நச்சுகளை வெளியேற்றத் தெரியாமலும் பலர் இறக்கிறார்கள்.
உணவுப்பொருள்களினால் உடம்பில் ஏற்படும் நச்சுத்தன்மையை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்தி, உடல் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாக்கும் முறையே காய சுத்தி அல்லது அக சுத்தி எனப்படுகிறது. காய சுத்தி முறையைக் கற்றவர்களுக்குப் பட்டினி என்பதே கிடையாது.
மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே இயற்கை மருத்துவத்தின் கூறுகளே. காயசுத்தி முறையில் உடலைச் சுத்தம் செய்து, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை உண்டு வாழந்து ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே இயற்கை மருத்துவத்தின் மையமான அம்சம்.
பெருவாழ்வு ரகசியம்
நியாயமாகப் பார்த்தால் மனிதன் 300 ஆண்டுகள் வாழ வேண்டும். பழங்கால மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சமைக்காத இயற்கை உணவை உண்டுவாழும் முயல் இனத்தில், முயல்குட்டி, பிறந்த 3 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. முயலின் வாழ்நாள் 60 மாதங்கள்.
ஆட்டுக்குட்டி, 6 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. ஆட்டின் வாழ்நாள் 120 மாதங்கள். பசு மாட்டின் கன்று, ஓர் ஆண்டில் பருவத்துக்கு வந்து கன்று போடுகிறது. பசுவின் வாழ்நாள் 240 மாதங்கள்.
மனித இனம் 15 ஆண்டுகளில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராவதால், மனித இனத்தின் வாழ்நாள் 3600 மாதங்களாக இருக்க வேண்டும்.
முயல்: 20*3=60/12=5 ஆண்டுகள்
ஆடு: 20*6=120/12=10 ஆண்டுகள்
பசு: 20*12=240/12=20 ஆண்டுகள்
மனிதன்: 20*180=3600/12=300 ஆண்டுகள்
மனிதனும் விலங்கும் பருவம் எய்தும் காலத்தைக் கொண்டு ஆயுள்காலம் கணிக்கப்படுகிறது. இதுவே இயற்கை நியதியாகக் கருதப்படுகிறது.
உணவாகக் கருதப்படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் இயல்புநிலை மாறாமல், ஆவியில் வேகவைத்து உண்டால் நீண்ட நாள் வாழலாம். ஆனால், நாம் அப்படிச் செய்வதில்லை. முறையற்ற உணவுப் பழக்கத்தையே நாம் பின்பற்றுகிறோம்.
நமது உணவில் பெரும்பான்மையாக இடம்பெறும் தாளித்த, வறுத்த உணவுகள் நமது வாழ்நாளைக் குறைக்கின்றன. அதோடு அசுத்தமான காற்றும் அசுத்தமான குடிநீரும் வாழ்நாளைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மேலும் புகை, மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு 60 வயதுக்கும் குறைவாகவே வாழ்நாள் அமைகிறது. இவற்றையெல்லாம் மீறி நாம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும்

திங்கள், டிசம்பர் 20, 2010

அறுகம்புல்


அறுகம்புல் விநாயகருக்கு சூட்டப்படும் என்பதால் இது தெய்வீக மூலிகை இனத்தைச் சார்ந்ததாகிறது. ஆற்றங்கரை ஓரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் எளிதில் வளரக்கூடியது. அறுகம்புல் மருத்துவ குணங்கள் பலவும் கொண்டது. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண் நோய், தலை நோய், கண் புகைதல், குருதியழல் இவை ஒழியும்.
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண் நோயும், கண் புகைச்சலும், மூக்கிலிட, மூக்கிலிருந்து பாயும் குருதியும், காயம் பட்ட இடத்தில் பூச அதிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். புண்களின் மீது தடவ புண் ஆறி வரும்.
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை போகும்.
அறுகம்புல்லுடன், கடுக்காய்த் தோல், இந்துப்பு சிறிது, கிரந்தி தகரம், கஞ்சாங்கோரை இவை ஓரெடை எடுத்து மோர் விட்டரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு, படர்தாமரை ஒழியும், நுண் புழுக்களும் சாகும்


தேங்காயை கருகிப் போகும் அளவு சுட்டு அந்த தேங்காயின் அளவில் பாதி மிளகு சேர்த்து நன்றாக அரைத்து நோய் ஏற்பட்ட இடங்களில் பூசி பகல் முழுதும் விட்டு பின்னர் மாலையில் வெந்நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு மூன்றுநாள் தொடர்ந்து செய்தால் சொறி , சிரங்கு, கரப்பான் போன்ற நோய்களும், அதே போல ஆறாமல் இருக்கும் மற்ற புண்கள் கூட ஆறிவிடும் என்கிறார் போகர்.

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்!


தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு.


தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள்
பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்; தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும்: தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகச, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப் புண்கள்: தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு (Ulcer) தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?

மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium Chain Fatty Acid) தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid)மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism)பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி: முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்கவேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை (Electoral Imbalance) இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் "ஜெல்' என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும்.
நன்றி தினமணி

செவ்வாய், டிசம்பர் 14, 2010

கோவை




                  மூலிகைகள் எல்லாம் மலைகளில்தான் கிடைக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் அருகே காணப்படும் புல், பூண்டு, செடி, கொடி, மரம் அனைத்தும் மூலிகைகள்தான். 

இவை அனைத்தும் நமக்கு பயன்படும் வகையில் அவற்றின் மருத்துவக் குணங்களை கண்டறிந்து சொன்னவர்கள்தான் சித்தர்களும், ரிஷிகளும். இந்த மூலிகைகளின் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளிலேயே நின்றுவிட்டன. 

அவை அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகையைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் கோவையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்களை சாப்பிட பறவையினங்கள் பறந்தோடிவரும். 

இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர்.

இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனை தொண்டைக்கொடி என அழைக்கின்றனர். மேலும் அப்பைக் கோவை, ராமக் கோவை என இருவகைகள் உள்ளன. 

Tamil - Kovai

English - Ivy gourd

Telugu - Donda keya

Malayalam - Kovvai

Sanskrit - Bimbi

Botanical Name - Coccinia grandis

கண்ணுங் குளிர்ச்சிபெறுங் காசமொடு வாயுவறும்

புண்ணுஞ் சிரங்கும் புரண்டேகும்-நண்ணுடலும்

மீதிலார் வெப்பகலும் வீழாநீர்க் கட்டேருங்

கோதிலாக் கோவையிலைக்கு

(அகத்தியர் குணபாடம்)

கண் நோய் குணமாக

கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. 

இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க

தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.

கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

இரத்தம் சுத்தமடைய

காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. 

இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

உடல் சூடு சமநிலையிலிருக்க

தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குரு ஏற்படாமல் தடுக்க.

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.

தாது புஷ்டியாக

இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறுவது திண்ணம்

திங்கள், டிசம்பர் 13, 2010

வெற்றிலை


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.