|
துளிசியைக் கொண்டு தேநீர் தயாரித்துக் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இந்த துளசி தேநீர் வெறும் உற்சாகத்தையும், நல்ல வாசனையையும் மட்டும் அளிக்க வில்லை. உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோயில் இருந்து காப்பாற்றுவதற்கான சக்தியையும் அளிக்கிறது. துளசியை எந்த முறையில் உட்கொண்டாலும் அது உடலின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. சக்தியை அளிக்கிறது. நோயை எதிர்க்கும் ஆற்றலையும், நோயை குணப்படுத்தும் ஆற்றலையும், நோயில் இருந்து காக்கும் ஆற்றலையும் துளசித் தேநீர் தருகிறது. துளசி இலைகளை நிழலில் உலர்த்தி எடுத்து அவற்றை நீங்கள் போடும் தேநீரில் கூட சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் க்ரீன் டீ போன்றவற்றில் துளசி சேர்த்ததை வாங்கி வந்து அருந்தலாம்.
|
|
இனிப்பு பண்டங்கள் செய்யும் போது வாசனைக்காக ஏலக்காயை சேர்ப்பார்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஏலக்காயில் பல்வேறு அரிய குணங்கள் உள்ளன. புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏலக்காயில் கலந்துள்ளன. அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். பாலில் ஏலக்காய் சேர்த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைப் பேறில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். இதனை இருபாலரும் அருந்தலாம். இருவருக்குமே பலன் தரும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். |
|
| ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. |
|
| குழந்தை பெற்ற பெண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும் அதிகமாக உண்ண வேண்டும். எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. சுறா போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி செய்யும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. பிள்ளை பெற்ற பெண்களுக்கு தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்கின்றனர். பூண்டிற்கு இத்தகைய மருத்துவ குணம் இருப்பதால் பிள்ளை பெற்ற பெண்கள் பூண்டினை ஏராளமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. |
|
|
சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று பலருக்கும் தெரியும். அதனை எந்த விஷயத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரிவதில்லை. வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் கடாயில் சீரகத்தைப் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த கஷாயத்தைக் கொடுக்க வாந்தி நிற்கும். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை பழச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும். |
|
| முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும். வாழைப் பூ கை, கால் எரிச்சல், இருமல், வயிற்றுக் கடுப்பு, வெள்ளை ஒழுக்கு போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும்.
|
| சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும். |
|
| சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. |
|
| சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது. மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும். சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும். ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது. உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும். இதேப்போல காலில் ஆணி ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் நசுக்கிய பூண்டை வைத்துக் கட்டி வந்தாலும் குணம் கிடைக்கும். |
|
| பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம். அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான். அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது. இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும். வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும். |
|
| வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மற்ற பழங்களை விட பல நல்ல குணங்களையும் வாழைப் பழம் பெற்றுள்ளது. அதுமட்டும் அல்லாமல் பல நோய்களை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றலையும் வாழைப்பழம் பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது மிகவும் நல்லது. அதனால்தான் பழங்காலத்தில் எந்த விசேஷமாக இருந்தாலும் வெற்றிலையுடன் வாழைப்பழத்தையும் இணைத்து கொடுத்தனர். மலச்சிக்கல், குடல் பிரச்சினை, மனத் தளர்ச்சி ஆகியவற்றை நீக்கும் தன்மை உடையது வாழைப்பழம். வாழைப்பழத்துடன் பால் சேர்த்து மில்க்ஷேக் சாப்பிட்டால் உடல் சோம்பல் ஓடிவிடும். புகைப்பழக்கத்தை விடமுடியாமல் தவிப்பவர்கள், வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புகைக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக